பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்குரிய சட்ட ஏற்பாடுகள் அனைத்தும் தற்சமயம் நிறைவு பெற்று, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்..
கொழும்பு (Colombo) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வெறும் அரசமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்வதை விடவும், நாட்டுக்கு முற்றிலும் புதிய அரசமைப்பு ஒன்றுக்குச் செல்வதே எமது அரசின் பிரதான எதிர்பார்ப்பாகும்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இந்த வாக்குறுதியை நாம் நாட்டு மக்களுக்குத் தெளிவாக வழங்கியிருந்தோம். புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான விடயத்தில் நாம் இப்போதும் மிகவும் உறுதியாகவே உள்ளோம்.
அது குறித்த ஆரம்பக்கட்டப் பேச்சுகள் மற்றும் உரிய நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
எனினும், அந்த விடயத்துக்குத் தற்போதைய காலகட்டத்தில் முதன்மை முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதை நாம் மறைக்காமல் ஏற்கின்றோம்.
ஏனெனில், நாடு தற்சமயம் எதிர்கொண்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொருளாதாரம், கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய அத்தியாவசியத் தேவைகளுக்கே எமது அரசு தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டமானது இந்த வருடத்துக்குள் நிச்சயமாக நீக்கப்படும். அதற்குரிய ஆரம்பக்கட்ட சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்துவிட்டன.
அது தொடர்பான உத்தியோகபூர்வ யோசனை மிக விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதேபோன்று, நீண்டகாலமாகக் கோரப்பட்டு வரும் நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமை ஒழிப்பு என்பது, நாம் கொண்டுவரவுள்ள புதிய அரசமைப்புடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒரு விடயமாகும்.
முழுமையான மக்கள் அனுமதியுடன் புதிய அரசமைப்பு இலங்கையில் கொண்டுவரப்படும். எமது அரசின் பதவிக்காலத்தில் இன்னும் மூன்று வருடங்கள் எஞ்சியுள்ளன.
புதிய அரசமைப்பைத் தயாரித்து அமுல்படுத்துவதற்கு இந்தக் காலப்பகுதி முற்றிலும் போதுமானதாகும். இந்த ஆட்சிக் காலத்துக்குப் பிறகும், எமது மக்கள் நலச் சேவைகளைக் கண்டு நாட்டு மக்கள் எமக்கே மீண்டும் தங்களின் பலமிக்க ஆணையை வழங்குவார்கள் என்ற முழுமையான நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார். (Lankasri)







No comments